காடுகளின் முக்கியத்துவம்!
மேலை நாடுகளில் காற்று மாசுபடுவதைக் கவனமாகக் குறைத்து வருகிறார்கள். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. நமது மக்களில் பெரும்பாலானோருக்கு நல்ல காற்று கிடையாது, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியில்லை. கிராமப்புறங்களில் ஏழைமக்கள் எரிபொருளுக்காகவும், பிழைப்புக்காகவும் மரங்களை வெட்டி வீழ்த்தி விறகுகளாக்குகிறார்கள். எரிபொருளுக்கு அரசு நிரந்தரமான மாற்று ஏற்பாடு செய்தால் லட்சக்கணக்கான மரங்களைக் காப்பாற்ற முடியும். ஆனால் அந்நிலை உருவாகவில்லை.
இந்தியாவில் வனத்துறையின் கண்காணிப்பில் 12 சதவீத காடுகள் உள்ளன. ஆனாலும் காடுகள் கொள்ளை போவது தொடர்கிறது. நாட்டில் உள்ள காடுகளில் ஏழில் ஒரு பங்குக்குச் சமமான காடுகள் இமயமலையில் உள்ளன. மாபெரும் நிழற்குடையாக உள்ள அந்தக் காடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.
நமது வெப்பம் சார்ந்த மின் உற்பத்தி நிலையங்கள், நீர்மின் நிலையங்கள், அணு ஆற்றல் நிலையங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் காடுகள் தரும் ஆற்றல் அதிகம். விறகை எரிப்பதன் மூலம் 40 சதவீத ஆற்றல் கிடைக்கிறது. விலங்குகளின் எரு மூலமாக 20 சதவீத ஆற்றல் கிடைக்கிறது. ஆனால் அவற்றை நாம் நல்லவிதத்தில் பயன்படுத்திக்கொள்ளவில்லை. எருவை எரிப்பதற்குப் பதிலாக உரமாக விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தலாம். அது 20 கோடி ஏக்கர் விவசாய நிலத்துக்குப் பயன்படும். ஆண்டுக்குப் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருளைக் கூடுதலாக உற்பத்தி செய்ய முடியும்.
காடுகளின் முக்கியத்துவத்தை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதே உண்மை. அவை உயிர்த்துடிப்புள்ள ஆற்றல்களஞ்சியமாகும். பூமியையும், இயற்கைச் சமநிலையையும் பாதுகாக்கும் கவசமாகும் காடுகள். எனவே அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாதுகாக்க முயல்வோம்.
No comments:
Post a Comment